யாழ் செல்ல முன்பதிவுகளை செய்யலாம்

அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை (15)  மீண்டும் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான  ரயில் பாதையிலான போக்குவரத்து  கடந்த ஜனவரி மாதம்    புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது.

62 கிலோ மீற்றர் தூரம் புனரமைக்க இந்திய கடன் உதவியின் கீழ் 33 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்டதன் பின்னர் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில்களுக்கான  ஆசன முன்பதிவு சேவையும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.