வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தோடு இணைந்து வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

சொந்த காணியில் வீடு கட்டுவது, நகரத்துக்கு வெளியே அவர்கள் விரும்பும் பகுதியில் காணியற்றவர்களுக்கு வீடுகள் கட்டுவது. அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவது ஆகிய மூன்று முறைகளினூடாக இந்த வீடுகளை  நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வீடமைப்புத் திட்டத்துக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நிதியுதவி வழங்குவதுடன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணப் பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான கூட்டு அமைச்சரவை பத்திரம் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளம் ஏற்கனவே வீட்டுத் தேவையுள்ள வெளிநாட்டுப் பணியாளர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அதற்காக ஏறக்குறைய 1000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அதுமட்டுமன்றி, மாவட்ட மட்டத்திலும் வீடுகள் தேவைப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.