22ஆம் திருத்தம் பாதாளத்துக்குள் நாட்டை தள்ளும்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்கும் வகையில் 22ஆம் திருத்தம் கொண்டுவரப்படுமாயின் அது நாட்டை பாதாளத்துக்குள் தள்ளுமென தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இந்த முயற்சியை வன்மையாக கண்டித்துள்ளார்.

எங்களைப் பொறுத்த வரையில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. தமிழர்களுக்கு தீர்வு கிடைப்பதாக இருந்தால் ஒற்றையாட்சி முறை முதலில் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.

இலங்கையில் நடைமுறையில் உள்ளது  என்று  சொல்லப்படுகின்ற அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நீக்கி   22ஆவது யாப்பு மாற்றமாக புதிய சட்டத்தை கொண்டு வர இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில  கூறிய கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு, அவரது கருத்தை எதிர்க்கிறேன் என்றார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

13ஆவது திருத்தத்தை நீக்கி 22ஆம் திருத்தத்தை கொண்டு வருவதற்கான ஓர் எண்ணப்பாட்டுக்கு அவர்கள் வருவார்களாக இருந்தால் அது முற்று முழுதாக இலங்கை படு பாதாளத்துக்கு  தள்ளும் நிலைமையை ஏற்படுத்தும் என்றார்.

தமிழர்கள் இயக்கங்கள், நாகர்களாக இலங்கையினுடைய தேசிய இனமாக பூர்வீக குடிகளாக இருக்கிறார்கள்.  அவர்களுக்கு உரித்து இருக்கிறது. வடக்கு கிழக்கில் இருக்கின்ற மக்களினுடைய எண்ணக் கருக்களுக்கு அமைவாக ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவோ, கருத்துக் கணிப்பின் ஊடாகவும் அவர்கள் விரும்புகிற ஆட்சி முறையில் இருக்கும் உரித்து அவர்களுக்கு இருக்கிறது என்றார்.

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டம்  கொண்டு வரப்பட்டது. ஆனால் அது கூட முற்று முழுதாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றார்.

ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டு வரப்படும் போது அது தமிழர்களுக்கு தீர்வாக அமையாது. ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்   உதய கம்மன்பிலவின் கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு, அவரது கருத்தை எதிர்க்கிறேன் என்றார்.