268 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்ட இருவர் கைது

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 268 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி வெலிகடை, கலபலுவாவ பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து சுமார் 268 இலட்சம் ரூபா பெறுமதியான முத்து,

இரத்தினகற்கள் மற்றும் தங்கம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் மந்தாவில பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 924 இரத்தினக்கற்கள், 08 கைக்கடிகாரங்கள், 05 தங்க நெக்லஸ்கள், 04 வளையல்கள், 06 தங்க மோதிரங்கள், 10 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தலங்கம வடக்கு மற்றும் மாலம்பே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டுள்ளது.