56 மதகுருமார்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

சிறுவர்  மற்றும் பாலியல் வன்கொடுமை, நிதி மோசடி, புதையல் தோண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புப்பட்டுள்ள 56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) வாய்மூல விடைக்கான வினாக்களின் போது  பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2023 ஜூன் 01 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் பல்வேறு 56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் 29 பௌத்த தேரர்கள், 03 இந்து குருமார்கள், 02 மௌலவிகள் கைதிகள் என்ற அடிப்படையிலும், 19 பௌத்த தேரர்களும், 01 கத்தோலிக்க மதகுருக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 19 பௌத்த தேரர்களும், ஒரு இந்து குருக்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பெண் பாலியல் குற்றச்சாட்டில் 03 பௌத்த தேரர்களும் சிறையில் உள்ளார்கள். கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாம் மத குருமார்கள் பெண் பாலியல் குற்றச்சாட்டில் சிறையில் இல்லை.

அத்துடன், மனித படுகொலை குற்றச்சாட்டில் 2 பௌத்த தேரர்களும் 01 இந்து குருக்களும் உள்ளனர். 01 கத்தோலிக்க மத குரு சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நிதி மோசடி குற்றச்சாட்டில் 2 தேரர்களும், 1 இந்து மதகுருக்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 03 பௌத்த தேரர்கள் சிறையில் உள்ளனர். கொடூர பாலியல் குற்றச்சாட்டுடன் 02 பௌத்த தேரர்கள் சிறையில் உள்ளார்கள்.

இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மதகுருமார்கள் இந்த குற்றச்சாட்டுக்குள் உள்ளடங்கப்படவில்லை. சிறு வயது பிள்ளைகள், ஆண் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 20 பௌத்த தேரர்களும், 01 இந்து மதகுருக்களும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய சிறைச்சாலைகளில் 48 பௌத்த தேரர்களும் , 03 இந்து குருக்களும், 01 மௌலவிகளும், 04 கத்தோலிக்க மதகுருமார்களும் சிறைக்கைதிகளாக உள்ளனர்.