ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க ஆக.5-ல் அடிக்கல்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க ஆக.5-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டுகிறார்.

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021-ல் அகழாய்வு பணி தொடங்கியது. இதில் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் மற்றும் ஏராளமான பழங்கால தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. முதுமக்கள் தாழிகளை திறந்து அவற்றில் உள்ள பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க ஆக.5-ல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்ட உள்ளதாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீ வைகுண்டம் செல்லும் சாலையின் ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

சில நாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு: மேலும், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெற்ற ‘பி’ மற்றும் ‘சி’ சைட் பகுதியில் அகழாய்வு குழிகளுக்கு மேல் கண்ணாடி தளம் அமைத்து, அங்கு கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தி மக்கள் பார்வையிட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளையும் மத்திய அமைச்சர் பார்வையிட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.

ஆதிச்சநல்லூரைப் போலவே தூத்துக்குடி மாவட்டத்தில் திருக்கோளூர், அகரம், ஆகிய இடங்களில் அகழாய்வு நடக்கிறது. இங்கு கண்டெடுக்கப்படும் பொருட்களும் அருங்காட்சியகத்தில் இடம்பெறும்.