மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து ஆக.6-ல் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

 மணிப்பூர் வன்முறை சம்பவத்தைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆக.6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மணிப்பூர் இனக்கலவரம், வன்முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள மணிப்பூர் மாநில அரசைக் கலைத்திட வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யம் சார்பில், வரும் 6-ம் தேதி காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு வள்ளுவர்கோட்டத்திலும், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு கோயம்புத்தூரிலும், காஞ்சி மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்க ளுக்கு காஞ்சிபுரத்திலும், மதுரைமண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு மதுரையிலும், சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு சேலத்திலும், திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு நாகப்பட்டினத்திலும், நெல்லை மண்டலத்துக்கு உட்பட்டமாவட்டங்களுக்கு திருநெல்வேலியிலும் மற்றும் விழுப்புரம் மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு திட்டக்குடியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மநீம மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பங்கேற்பார்கள்.