விமான கட்டணமும் இறக்கை கட்டி பறக்கிறது

விமானம் மட்டும் உயரே உயரே பறப்பதில்லை. அதன் கட்டணமும் உயரே உயரே பறந்து கொண்டிருக்கிறது. வருகிற திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் லீவு போட்டால் போதும் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இந்த விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், விடுமுறையை கொண்டாட செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு ஏராளமானோர் செல்கிறார்கள். இந்த இடங்களுக்கு செல்லும் ரெயில்கள் எதிலும் டிக்கெட் இல்லை. இதனால் உள்ளூர் விமானங்களுக்கு படையெடுக்கிறார்கள். அலைமோதும் பயணிகள் கூட்டத்தை பார்த்ததும் விமான நிறுவனங்களும் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளன.

வழக்கமாக சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.5 ஆயிரம் வரை தான் கட்ட ணம் இருக்கும். ஆனால் இப்போது ரூ.16 ஆயிரம். இதேபோல் திருவனந்தபுரத்துக்கு அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் கட்டணம் இருந்தது. இப்போது ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதேபோல் பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கும் சாதாரணமாக ரூ.5 ஆயிரம் தான் கட்டணம். தற்போது ரூ.15 ஆயிரம். இதேபோல் தூத்துக்குடிக்கும் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு பற்றி விமான நிறுவனங்கள் ஏஜென்சிகளிடம் விசாரித்தபோது, பயணிகளின் வருகைக்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்படும். மதுரையை பொறுத்தவரை கோர்ட்டுக்கு செல்பவர்கள், முக்கிய பிரமுகர்கள் செல்வது என்று வரவேற்பு அதிகமாகவே இருப்பதால் இந்த கட்டணங்கள் சமீப காலமாக உயர்ந்தே இருக்கிறது. கட்டணம் உயர்வாக இருந்தாலும் எந்த விமானத்திலும் டிக்கெட் இல்லை என்பதுதான் நிலைமை என்றனர்.