ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் 520 வகையான சிறுதானிய உணவு சமைத்து உலக சாதனை

ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் 520 வகையான சிறுதானிய உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்துள்ளது.

சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக சிறுதானிய ஆண்டை முன்னிட்டு ‘சிறுதானியங்களின் சங்கமம்-2023’ நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழக உணவு பாதுகாப்புத் துறையுடன் இணைந்து ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சத்துணவு மருத்துவத் துறை மாணவர்கள், ஆசிரியர்கள் 11 சிறுதானியங்களை கொண்டு தயாரித்த 520 வகையான சிறுதானிய உணவு வகைகளை காட்சிப்படுத்தியது உலக சாதனைஅங்கீகாரம் பெற்றது.

சிறுதானிய உணவுகளை பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலகசாதனை சான்றிதழை வழங்கி பாராட்டினார். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு சிறுதானியங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. சிறுதானியங்களை பயிரிடும் சிறு விவசாயிகளுக்கு உதவிகள் செய்வதோடு, சிறுதானியங்களில் கலப்படங்களை தடுத்து வருகிறது.

மத்திய அரசு நடத்திய உணவு பாதுகாப்பு தொடர்பான போட்டியில் நாடு முழுவதும் 260 மாவட்டங்கள் பங்கேற்றன. சிறந்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட 31 மாவட்டங்களில், 13 மாவட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. நாட்டிலேயே முதன்மை மாவட்டமாக கோவை தேர்ந்தெடுக்கப்பட்டது.

உணவில் உப்பு, எண்ணெய், சர்க்கரை குறைப்போம், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை தமிழக உணவு பாதுகாப்புத் துறை ஏற்படுத்தி வருகிறது. சிறுதானிய உணவுகளில் கலப்படம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேணா, இயக்குநர் தேவபார்த்தசாரதி, ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் உமாசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.