சீனாவில் கடும் மழையினால் 20 பேர் பலி, 19 பேர் மாயம்

சீனாவில், சூறாவளியினால் ஏற்பட்ட கடும் மழை காரணமாக குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 19 பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தோக்சூரி எனும் சூறாவளி காரணமாக, தொடர்ச்சியாக 4 ஆவது நாளாக கடும் மழை பெய்து வருகிறது.

இதனால், பல நதிகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதுடன் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், குறைந்தபட்சம் 20 பேர் பலியானதுடன் மேலும் 19 பேரை காணவில்லை என சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தலைநகர் பெய்ஜிங்கில் சுமார் 52,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், 100 இற்கும் அதிகமான வீதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன.

பெய்ஜிங் வெள்ளம் காரணமாக 3 ரயில்களும் பயணத்தைத் தொடர முடியாமல் சிக்கியுள்ளன.  ரயில் நிலையமொன்றிலும் அதனைச் சூழ்ந்த பகுதிகளிலும் சிக்கிய மக்களுக்கு உணவுப் பொதிகளை விநியோகிப்பதற்கான 4 ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள இரு விமான நிலையங்களில் நேற்று மாலை 200 இற்கும் அதிகமான விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டன. அத்துடன் சுமார் 600 விமானப் பயணங்கள் தாமதிக்கப்பட்டன.