மடு திருத்தலத்திற்கு சிறிலங்கா ஜனாதிபதியின் விஜயத்தையொட்டி பாதுகாப்பு ; பக்தர்கள் விசனம்

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் நாளை செவ்வாய்க்கிழமை 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள நிலையில் அன்றைய தினம்சிறிலங்கா  ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மடு திருத்தலத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில்,சிறிலங்கா  ஜனாதிபதியின் மடு திருத்தல விஜயத்தை ஒட்டி மடு திருத்தலத்தில் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மடு திருத்தலத்திற்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா ஜனாதிபதி உள்ளடங்கலாக அமைச்சர்கள் பலரும் அன்றைய தினம் மடு திருத்தலத்திற்கு வருகை தர உள்ளமையினால் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனால், மடு திருத்தல நுழைவாயில் மற்றும் ஆலய வளாக பகுதிக்குச் செல்லும் போது இராணுவம் மற்றும் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றமையினால் முன்பு என்றும் இல்லாத அளவுக்கு தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பக்தர்கள் விசனம்  தெரிவித்துள்ளனர்.