மாத்தளையில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் ஜீவனின் தலையீட்டால் பணி நீக்கம்

மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்திற்க்குட்பட்ட ரத்வத்தை தோட்ட பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலையீட்டையடுத்து அவரை பணி நீக்கம் செய்ய தோட்ட நிர்வாகம் இணங்கியுள்ளது.

அத்துடன், குறித்த உதவி முகாமையாளரால் அடித்து நொறுக்கப்பட்ட வீட்டுக்கு பதிலாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு புதிய வீடொன்றை நிர்மாணித்து கொடுக்கவும் நிர்வாகம் இணங்கியுள்ளது.

மாத்தளை, ரத்வத்தை தோட்டப்பகுதியில் தோட்ட தொழிலாளர் ஒருவரின் தற்காலிக குடியிருப்பை உதவி முகாமையாளர் ஒருவர் அடித்து நொறுக்கும் காட்சி மலையக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்காகவும், நிர்வாகத்துடன் பேச்சு நடத்துவதற்காகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) மாத்தளை சென்றிருந்தார்.

இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய பணிப்பாளர் ரூபதர்ஷன், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் சஞ்ஜீவ விஜயகோன், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட பிரமுகர்களும் அமைச்சருடன் சென்றிருந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய உதவி முகாமையாளரை சம்பவ இடத்திற்கு அமைச்சர் அழைத்த நிலையில்,  அதற்கு நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தோட்ட நிர்வாகத்துடன் ஜீவன் தொண்டமான் கடும் சொற்போரில் ஈடுபட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

அதன்பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய உதவி முகாமையாளரை பணி நீக்கம் செய்வதற்கு நிர்வாகம் இணங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு புதிய வீட்டை நிர்மாணிக்கவும் உடன்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தோட்ட மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாகவும் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.