ஈபிள் கோபுரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்த இளைஞர் கைது

ஈபிள் கோபுரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று (ஆக. 17) அதிகாலை 5 மணியளவில் ஈபிள் கோபுரம் திறக்கப்படும் முன்பே காவலர்களின் கவனத்தை திசை திருப்பி மர்ம நபர் ஒருவர் கோபுரத்தின் உள்ளே நுழைந்துள்ளார். சிறிது நேரத்திலேயே சிசிடிவி கேமராவின் மூலம் காவலர்கள் அவரை பார்த்துள்ளனர். எனினும் கோபுரத்தின் லிஃப்ட்டை பயன்படுத்தி அவர் மேலே சென்றுவிட்டார்.

330 மீட்டர் உயரம் கொண்ட ஈபிள் கோபுரத்தின் உச்சிக்கு சென்றதும் தனது முதுகில் மாட்டிருந்த பாராசூட் உடன் அங்கிருந்து குதித்துள்ளார். கோபுரத்தின் பாதுகாவலர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அவரை கவனமாக கண்காணித்தனர். அருகில் இருந்த விளையாட்டு மைதானம் ஒன்றில் பாராசூட் மூலம் தரையிரங்கிய அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் மீது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக காலை 9 மணிக்கு திறக்கப்படும் ஈபிள் கோபுரம் இதனால் நேற்று தாமதமாக திறக்கப்பட்டது.

கடந்த வாரம் ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இருந்த அங்கிருந்து மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டலுக்கும், நேற்று கைது செய்யப்பட்ட இளைஞருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட இளைஞர் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.