2024 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி?

காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி, நாடாளுமன்றத்தில் மிகச் சிறப்பாக செயல்படும் தகுதியுடைவர்; அவருக்காக, கட்சி சிறப்பாக திட்டமிடும் என நம்புகிறேன் என்று பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்தார்.

இதுகுறித்து அவா் செய்தியாளரிடம் அவர் பேசியதாவது, ‘மக்களவையில் பிரியங்கா நிச்சயம் இடம்பெற வேண்டும். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளன. நாடாளுமன்றத்தில் அவர் மிகச் சிறப்பாக செயல்படுவார். காங்கிரஸ் கட்சி அவருக்காக சிறப்பாக திட்டமிடுமென நம்புகிறேன்’ என கூறினார்.

பின்னர் நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில், தொழிலதிபர் கெளதம் அதானியுடன் ராபர்ட் வதேரா இருக்கும் படத்தை காண்பித்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சில விமர்சனங்களை முன்வைத்தார். இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்து, வதேரா கூறியதாவது:

”நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன். ஆனால், எனது பெயரை கெடுக்க முயன்றால், நிச்சயம் நான் குரலெழுப்புவேன். எனது மீது சுமத்தப்படும் குற்றங்களை நிரூபிக்க வேண்டும். விமானத்தில் அதானியுடன் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படம் என்னிடமுள்ளது. அதுகுறித்து நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் பதில் வரவில்லையே?

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் தங்களது உரிமைக்காக போராடியபோது, மத்திய பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி அவர்களை சந்திக்கவோ குறைகளை கேட்டறியவோ இல்லை. மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராககூட இல்லாத என்னை பற்றி ஸ்மிருதி இரானி எதிர்மறை கருத்துகளை தெரிவிக்க என்ன அவசியம் உள்ளது? மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, நான் குறிவைக்கப்பட்டு வருகிறேன். ஆனால், எனக்கு எதிராக எதையும் அவர்களால் நிரூபிக்க முடியவில்லை என்றார் வதேரா